Category Archives: குருஜியும் சேஷ மஹானும்
மகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும்.
ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே
மகானின் வாக்கும், சென்ன கேசவப்பா,
மாதேஸ்வர மலையில் சொன்னதும் .
வருஷம்: 1997.
ஸ்ரீ மலைய மாதேஸ்வரர்– ஒரு மஹா சித்த புருஷர். இவர் சமாதி கோவில், மேட்டூர் (தமிழ் நாடு) to கொள்ளேகால் வழியில் 40 kms தூரத்தில் உள்ளது.
1997 –ஆகஸ்ட் பௌர்ணமி அன்று சமாதி கோவிலில் தியானம் செய்துவிட்டு, பகல் 12 மணிக்கு, சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றேன். பிறகு தங்கும் விடுதிக்கு சென்று விட்டேன்.
மாலையில் ஸ்ரீ மலைய மாதேஸ்வரர் உற்சவரை வெள்ளித்தேரில் இழுத்து வந்தோம். பிறகு தனியாக ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தேன். திடீரென, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் என் மனதில் தோன்றி, “மகாதேவன் சமாதி அடைந்து விட்டான் . இங்கு உட்காராதே, நாளை காலை புறப்படு“ என்றார். என் குருநாதர் (ஸ்ரீ குரு மகாதேவ்–தேரூர்– சுசிந்தரம்– கன்னியா குமரி மாவட்டம்)
1991 –ல்,“ராஜலிங்கம், நான் சமாதி நிலை அடைய சிறிது காலமே உள்ளது. நீ இனிமேல், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகளைப் பிடித்துக்கொள். உனக்கு அவரே எல்லாம்“ என்று சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.
இரவு உணவிற்காக அதே ஹோட்டலுக்குச் சென்றேன். ஒருவர் என்னிடம் வந்தார். தன் பெயர் சென்ன கேசவப்பா என்றும், ஹோட்டல் முதலாளி
என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். வயது 18 இருக்கும். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நன்றி“ என்றார். ஒன்றும் புரியவில்லை.
இன்று பகல், நீங்கள் இங்கு சாப்பிட்டது எனக்கு நன்றாக தெரியும். முதலில் தாங்கள் தான் சாப்பிட்டீர்கள். இந்த ஹோட்டல் ஆரம்ப காலம் முதல் இன்று வரை 15 to 20 சாப்பாடு தினமும் மீந்து விடும். ஆனால் இன்று எல்லாம் விற்று தீர்ந்து விட்டன. “நன்றி” என மீண்டும் கூறினார். நான் அவரிடம், எல்லாம் என்னுள் இருக்கும் சேஷனின் லீலை என்று சொல்லி, மகானைப் பற்றி விவரித்தேன். சென்ன கேசவப்பா அழுது விட்டார்.
அடுத்த நாள் காலை, ஹோட்டலுக்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் சேலம் செல்லும் பஸ்சுக்கு காத்திருந்தேன். யாரோ என கைகளை பிடித்த உணர்வு. சென்ன கேசவப்பா தான் அது. “சேலம் செல்ல கூட்டம் அதிகமாக நிற்கிறது. தங்களால் முடியாது. பஸ் டிரைவர் எனக்கு தெரிந்தவர். நான் தங்களுக்கு உதவுகிறேன்“, என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேலம் பஸ் கொள்ளேகாலில் இருந்து வந்தது. டிரைவர் சீட்டுக்கு அருகில் எனக்கு இடம் கிடைக்கும் படி செய்து, தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.
பிறகு சேலம் வழியாக கரூரில் உள்ள என வீட்டிற்குச் சென்றேன். என் மகன் கோகுல் ஒரு telegram –ஐ கொடுத்தான். அதில் ஸ்ரீ குரு மாஹதேவ், பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மஹா சமாதி அடைந்து விட்டார் என்ற தகவல் இருந்தது. “மகாதேவன் சமாதி அடைந்து விட்டான்,இங்கு உட்காராதே, நாளை காலை புறப்படு“ என்று நம் சேஷன் சொன்னதை நினைத்து பார்த்தேன்.
த்ரிகால மூர்த்திக்கு (சேஷன்) அனந்த கோடி நமஸ்காரம் செய்தேன்.
நன்றி.வணக்கம்.
குருஜி.
திருவண்ணாமலை. 14 .05 .2010